ஆன்மிகம்
பள்ளிவாசல் முன்பு யானை மீது இருந்தவாறு, பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி கொடியேற்றியபோது எடுத்தபடம்.

திசையன்விளை ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா: திரளானவர்கள் பங்கேற்பு

Published On 2019-11-25 04:05 GMT   |   Update On 2019-11-25 04:05 GMT
திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகமது (ஒலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை கத்முல் குர்ஆன் தொடக்கம், பள்ளிவாசல் பேஷ் இமாம் முகமது யூசுப் அலிம் தலைமையில் குர்ஆன் தமாம் செய்யப்பட்டது.

காலை 10 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி மற்றும் அஸீம் அகமது பிஜிலி ஆகியோர் கொடி, சந்தன குடம் ஆகியவற்றை யானை மீது அமர்ந்தவாறு ராமன்குடி முத்துகிருஷ்ணாபுரம் அருள்துரை நாடார் இல்லத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு உணவு பொட்டலங்கள், குளிர்பானங்கள், பழங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கொடி ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தர்காவை அடைந்தது. 12.15 மணிக்கு யானை மீது இருந்தவாறு பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி கொடியேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தர்காவில் சந்தனம் மொழுகி மலர் போர்வை போர்த்தினர். மாலையில் மவுலூது ஷரீப் ஓதுதல், இரவு சலாவுதீன் தலைமையில் ராத்திப்புத்துல் காதிரியா திக்று மஜ்லிஸ் ஓதப்பட்டது. இரவு இஸ்லாமிய மார்க்க சமய சொற்பொழிவு, இஸ்லாமிய இன்னிசை கச்சேரி முதலியவை நடந்தது. கந்தூரி விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை நன்றி நவினல் நிகழ்ச்சி, சிறப்பு துவா ஓதப்பட்டு நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News