ஆன்மிகம்

அரேபியத் தீபகற்பத்தின் தலைநகராகிய மதீனா

Published On 2018-05-21 09:58 GMT   |   Update On 2018-05-21 09:58 GMT
முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்கக் கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டு, அவர்களின் சந்தேகங்கள் நீங்கி, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர்.
முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்கக் கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டு, அவர்களின் சந்தேகங்கள் நீங்கி, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர்.

ஜகாத் பொருட்களை ஏழை எளியோருக்குப் பங்கிட்டு வழங்கிய பின்பு மீதி இருப்பதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து ஆலோசனை கேட்டனர் தஜீப் குழுவினர். அப்படியே நபி(ஸல்) அவர்களுடன் சில காலம் தங்கி மார்க்கக் கல்வியைக் கற்றனர். கற்றுக் கொண்ட விஷயத்தை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் எழுதியும் கேட்டனர். அதன்பின் அங்கிருந்து புறப்படும்போது அவர்களின் அடிமையொருவர், நபி (ஸல்) அவர்களிடம் தன்னை அல்லாஹ் மன்னித்து, தன் மீது கருணை காட்டி உள்ளத்தால் சீமானாக்க வேண்டுமென்று தனக்காகப் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொண்டார். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

தய் குழுவினரை சந்தித்தபோது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அழகிய முறையில் எடுத்துக் கூற, அனைவரும் முஸ்லிமானார்கள். “ஒருவரைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்படும். ஆனால், அவர் என்னை நேரடியாகக் காணும் போது பேசப்பட்டதை விடக் குறைவாகவே அவரைப் பார்த்திருக்கிறேன். எனினும், ஜைதைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்பட்டது. என்றாலும் ஜைதை நேரடியாகக் காணும் போது அவரைப் பற்றிக் கூறப்பட்டது எனக்குக் குறைவாகவே பட்டது. எனவே, “’ஜைது அல் கைர் - சிறந்த ஜைது’ என நான் பெயரிடுகிறேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இவ்வாறு பல குழுக்கள் மதீனா வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துச் சென்றனர். முழு அரபியத் தீபகற்பத்திற்கும் மதீனாவே தலைநகராக மாறியது. ஆனால் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களில் சிலர் உண்மையில் இஸ்லாமை நேசித்து ஏற்கவில்லை, தங்களது தலைவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதற்காக மட்டுமே இவர்கள் இஸ்லாமை ஏற்றனர். ஆகையால் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் கொள்ளையடித்தனர், பல்வேறு குற்றங்களைப் புரிந்தனர்.

இவர்களைப் பற்றித் திருக்குர்ஆனில் “காட்டரபிகள் நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். கிராமப்புறத்தவர்களில் சிலர் தர்மத்திற்காகச் செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுகின்றனர். நீங்கள் காலச் சுழலில் சிக்கித் துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது. இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் தர்மத்திற்காகச் செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறைத் தூதரின் பிரார்த்தனையும் தங்களுக்குப் பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை அல்லாஹ்வின் அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; வெகு சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் பேரருளில் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்”

திருக்குர்ஆன் 9:97,98,99, அர்ரஹீக் அல்மக்தூம்

- ஜெஸிலா பானு.
Tags:    

Similar News