ஆன்மிகம்
அனுமனுக்கு வெண்ணெய் காப்பு

அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்

Published On 2021-03-04 07:14 GMT   |   Update On 2021-03-04 07:14 GMT
வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, வழிபட்டால், என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்,
அனுமனை கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ராமநாமத்தின் உயிர் உருவமான ஆஞ்சநேயர் எந்தவிதமான பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும் பக்தியுடனும் ராமனுக்கு பணிவிடை செய்தார். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வீரம், ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் அனுமன். அன்புக்கும், தொண்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஞ்சநேயர், சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்.

அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். ஸ்ரீராமபெருமானுக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் இறந்த பிறகு, இரண்டு அசுரர்கள் எப்படியாவது ஸ்ரீராமனை அழிக்க நினைத்தார்கள்.

ராம பக்தனான அனுமனை அனுப்பி அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான். அப்போது, தேவர்களும், தெய்வ ரூபங்களும் அனுமனிடம் பல ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் அனுமன் கையில் வெண்ணெயைக் கொடுத்தார். அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அரக்கர்களை அழித்துவிட்டுத் திரும்பவேண்டும் என்பது குறிப்பு.

அதன்படியே செய்தார் அனுமன். அதனால், வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமன் தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.

வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை. நினைத்த காரியங்களில் வெற்றி கிடைத்திட, உடல் ஆரோக்கியத்துடன் திகழ, ஸ்ரீ ராம பக்தன் அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, ஜெயபஞ்சகத் துதியைச் சொல்லி வழிபட்டால், வெற்றி மாலைகள் தேடி வரும்.
Tags:    

Similar News