ஆன்மிகம்

திருமண தடை நீக்கும் நரசிம்மர் கோவில்

Published On 2019-05-16 08:40 GMT   |   Update On 2019-05-16 08:40 GMT
திருவள்ளூர் பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் தலத்தில் வழிபட்டால் திருமண தடை தரும் தோஷங்கள் உடனடியாக விலகும் என்பது ஐதீகம்.
சென்னையில் இருந்து மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம் உள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் தலம் பல்வேறு தனித்துவமான சிறப்புகளைக் கொண்டது. விஜயநகர மன்னர்களால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் லட்சுமி நரசிம்மரும், மரகதவல்லி தாயாரும் எழில்வாய்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள். நரசிம்மர் சுமார் 7 அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கிறார். சரணாகதி தத்துவத்தை அவர் காட்டியபடி உள்ளார்.

அதுபோல தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் மரகதவல்லி தாயாரும் சரணாகதி தத்துவத்தையே வெளிப்படுத்துகிறார். இந்த ஆலயத்தில் வழிபாடு செய்யும் போது பக்தர்களுக்கு ஒருவித மன அமைதி கிடைப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.அதற்கு முக்கிய காரணம் நரசிம்மர், தனது மடியில் மகாலட்சுமியை அமர்த்தி, சாந்த சொரூபமாக காட்சி தருவதுதான். தாயார், நரசிம்மரை அணைத்தப்படி பக்தர்களை பார்த்தப்படி உள்ளார். தமிழ்நாட்டில் இத்தகைய லட்சுமி நரசிம்ம வடிவத்தை வேறு எங்கும் காண இயலாது.

பொதுவாக நரசிம்மர் கோவில்களில் தாயாரின் பெயர் அமிர்தவல்லி அல்லது நரசிங்கவல்லி என்று இருக்கும். ஆனால் பேரம்பாக்கம் தலத்தில் மரகதவல்லி என்று அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் வழிபட்டால் திருமண தடை தரும் தோஷங்கள் உடனடியாக விலகும் என்பது ஐதீகம். சென்னையில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் ஸ்ரீபெரும்புதூருக்கு முன்னதாக சவிதா மருத்துவமனையை கடந்ததும் வரும் வலது பக்க சாலையில் சென்றால் பேரம்பாக்கத்தை எளிதில் சென்றடையலாம். பூந்தல்லி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.
Tags:    

Similar News