ஆன்மிகம்
இயேசு

இயேசு கூறிய நிலையான செல்வம் எது...?

Published On 2021-07-14 03:44 GMT   |   Update On 2021-07-14 03:44 GMT
நம் வாழ்வின் குறிக்கோள் செல்வம் சேர்ப்பதல்ல என்றும், பேராசைக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் கூட்டத்தினருக்கும் தம் சீடருக்கும் அறிவித்தார். பின்பு இந்த உவமையைக் கூறினார்.
யூதேயாவில் இயேசு மக்களிடம் நற்செய்தி அளித்தபோது, ஒரு மனிதர் இயேசுவின் உதவியை நாடி வந்தார். அவருடைய சகோதரருக்கும் அவருக்கும் சொத்து பிரிப்பதில் கருத்து வேறுபாடு இருந்தது. இருவரும் மிகுதியான பங்கைப் பெற விரும்பினார்கள். இந்த சொத்துத் தகராறை தீர்த்துவைக்கவேண்டும் என்று அவர் இயேசுவிடம் வேண்டினார். பேராசைமிக்க அவர்களின் பாகப்பிரிவினையில் தலையிடுவது தம் வேலையல்ல என்று இயேசு மக்கள் அனைவரிடமும் கூறினார். நம் வாழ்வின் குறிக்கோள் செல்வம் சேர்ப்பதல்ல என்றும், பேராசைக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் கூட்டத்தினருக்கும் தம் சீடருக்கும் அறிவித்தார். பின்பு இந்த உவமையைக் கூறினார்.

‘‘செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே.’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன். அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், “அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?” என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை. பூச்சியும் இருப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.’’

இறைவன் நம் உள்ளத்தில் இறையாட்சியை நிறுவ விரும்புகிறார். அதற்குரிய வழியை இயேசு இங்கு அறிவிக்கிறார். நமக்கு அளிக்கப்பட்ட செல்வத்தாலும், திறமைகளாலும், எளியோருக்கு உதவிசெய்ய வேண்டும். அப்போது அச்செல்வம் அன்பு, பரிவு என்ற விண்ணக செல்வமாகிறது. அதைப் பூச்சி அரிப்பதில்லை, திருடரும் நெருங்குவதில்லை. அச்செல்வம் நம்மை நிலைவாழ்வுக்குத் தகுதியுள்ளவராக மாற்றுகிறது.
Tags:    

Similar News