ஆன்மிகம்
இயேசு

இயேசு உயிர்த்தார்: மீண்டும் வருவார்

Published On 2021-04-06 05:44 GMT   |   Update On 2021-04-06 05:44 GMT
உலகில் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, மரணித்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கடந்தபின் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றால், அவர் இறைமகன் இயேசு மட்டுமே.
உலகில் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, மரணித்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கடந்தபின் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றால், அவர் இறைமகன் இயேசு மட்டுமே. தன் சாவை எப்படி அவர் முன்னறிவித்தாரோ அதேபோல் “நான் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்” என்பதையும் முன்னறிவித்தார். ஆம்..! இறைமகன் இயேசுவின் முன்னால் மரணம் மண்டியிட்டது. “சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது, இயேசு உயிர்த்தார், அல்லேலூயா” என்னும் வெற்றிப் பாடல் நம் உள்ளங்களில் இந்த ஈஸ்டர் திருநாளில் ஒலிக்கின்றது. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் காட்டும் உட்பொருள் பற்றி நம்மில் எத்தனை பேர் முழுமையாக அறிந்திருக்கிறோம். அதைப் பகிரும் முன் நம் ஆண்டவராகிய இயேசு உயிர்ப்பு குறித்து நற்செய்தியாளர் யோவான் எழுதிய நூலிலிருந்து அந்த நிகழ்வை வாசிப்போம்.

வாரத்தின் முதல்நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை (யோவான் 20: 1-9).

வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. யூதர்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமை. ஓய்வுநாள் முடிந்தவுடன் விடியற்காலையிலேயே, மரியா மக்தலேனா கல்லறைக்குச்செல்கிறாள். இயேசுவின் உடலைக்காணவில்லை என்றவுடன், அவள் திரும்பிவந்து பேதுருவிடமும், யோவானிடமும் சொல்கிறாள். யோவான் அங்கே, துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டதாகவும், அத்துண்டு மற்றத்துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச்சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பார்க்கிறோம். விவிலியத்திலே இதற்குப் பொருள் இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில், தலைவர் வீட்டிலே சாப்பிடும்போது, கைதுடைப்பதற்கான துணி மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர் சாப்பிட்டவுடன் கைத்துணியைத் துடைத்தால், அதை மீண்டும் மடித்து வைத்துவிட்டுச்சென்றுவிடுவார்.

ஒருவேளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, யாராவது வந்தால், அந்தத்துணியை அப்படியே மடிக்காமல், சுருட்டிப் போட்டுவிட்டுச்சென்றுவிடுவார். இதனுடைய பொருள், அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார் என்பதே. இதைத்தான் திருத்தூதர்பணி நூல் அதிகாரம் 1, வசனம் 11-ல் பார்க்கிறோம்..

“கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லாவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்”. ஆக, இயேசு மீண்டும் வருவார் என்கிற செய்தி விவிலியம் வழியாக நமக்குத் தரப்படுகிறது.

‘கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்’ என்பது கிறித்தவ விசுவாசத்தின் மறைபொருள். தளர்ந்து போயிருக்கிற, துன்பங்களால் வாழ்வே வெறுத்துப் போயிருக்கிற ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய நற்செய்தி. கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற செய்தியே மனித வாழ்வுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இயேசுவின் உயிர்ப்பிலேதான் மீட்பின் வரலாறு நிறைவடைகிறது.
Tags:    

Similar News