ஆன்மிகம்
சாலமோனின் ஜெபம்

சாலமோனின் ஜெபம்

Published On 2020-11-01 07:51 GMT   |   Update On 2020-11-01 07:51 GMT
சாலமோனின் ஜெபத்தைக் கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். கடவுளிடம் எவ்வாறு பணிவு காட்ட வேண்டும் என்பதைக் குறித்துக் கற்றுக்கொண்டார்கள்.
இஸ்ரவேலின் யூப்ரடீஸ் ஆறு தொடங்கி, பெலிஸ்தியர்களின் தேசத்தைக் கடந்து எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த எல்லா நாடுகளையும் சாலமோன் ஆட்சி செய்தார். அது யூதேயா, இஸ்ரவேல் உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பாக இருந்தது. அந்தத் தேசங்களில் கடற்கரை மணலைப் போல ஏராளமான மக்கள் குடியிருந்தனர்.

வயிறுமுட்ட சாப்பிட்டும், குடித்தும் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். சாலமோனின் வாழ்நாள் முழுவதும், அவருக்குக் கப்பம் கட்டி சேவை செய்தார்கள். எகிப்தியர்கள், ஏக இறைவனாகிய பரலோகத் தந்தை மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு கற்பனை தெய்வங்களை வழிபட்டு வந்தனர். ஆனால், எகிப்தின் அரசனாகிய பாரோ மன்னனின் மகளை சாலமோன் மணந்துகொண்டார்.

சாலமோன் தன்னுடைய தந்தை தாவீது சொல்லிக்கொடுத்தபடியே கடவுளாகிய யகோவா அருளிய சட்டங்களைக் கடைப்பிடித்து, கடவுள் மீது மாறா அன்பு காட்டிவந்தார். கடவுளுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காக அவரிடமிருந்து பெற்றிருந்த திட்டத்தை தாவீது, தான் இறப்பதற்கு முன் சாலமோனிடம் கொடுத்திருந்தார். அரியணை ஏறிய பிறகு தனது ஆட்சியின் நான்காவது ஆண்டில், சாலமோன் அந்த ஆலயத்தைக் கட்டத் தொடங்கினார்.

50 ஆயிரம் எண்ணிக்கையில் கட்டிட வல்லுநர்களும், சிற்பிகளும் வேலை செய்தார்கள். தனது கருவூலத்தில் இருந்த அனைத்து பணத்தையும் செலவழித்து, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயத்தைக் கட்டிமுடித்தார், சாலமோன். அதன் காரணமாக கடவுளுக்கான முதல் பேராலயம், எருசலேமில் எழுந்து நின்றது.

ஆசாரிப்புக் கூடாரத்தில் இருந்ததைப் போன்றே இந்த ஆலயத்திலும் இரண்டு முக்கிய அறைகள் இருந்தன. அவற்றில் ஆலயத்தின் நடுவில் உள்ளறையாக இருந் ததில் உடன்படிக்கைப் பெட்டியை வைக்க சாலமோன் உத்தரவிட்டார். ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்த மற்ற புனிதப் பொருட்கள் அனைத்தையும் மற்றொரு அறையில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

அவ்வாறு செய்ததும் ஆலயத்தைக் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்ய ஒரு மாபெரும் விழாவை முன்னெடுத்தார். அந்த விழாவுக்கு உலகைப் படைத்துக் காக்கும் கடவுளாகிய யகோவா மீது நம்பிக்கை வைத்து அவர் தந்த கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கிற லட்சக்கணக்கான மக்கள் தேவாலயத்தின் முன் குடும்பம் குடும்பமாகக் குவிந்தார்கள்.

அனைவருக்கும் கூடாரமும், உணவும், நீரும் வழங்கிய சாலமோன், ஆலயத்துக்கு முன் முழங்கால் இட்டு கைகள் இரண்டையும் வானை நோக்கி உயர்த்தி ஜெபித்தார். “பரலோகத் தந்தையே, நீர் தங்குவதற்கு வானுலகம் முழுவதும்கூடப் போதாதே, அப்படியானால் நீர் தங்குவதற்கு இந்த ஆலயம் எப்படிப் போதுமானதாக இருக்கும். என்றாலும், என் தேவனே, உம்முடைய மக்கள் இந்த இடத்தை நோக்கி ஜெபிக்கும்போது தயவுசெய்து அவர்களுக்குக் காதுகொடுத்து உன் கருணையை அருளும்” என்று கடவுளிடம் உருக்கமாகக் கேட்டார்.

சாலமோனின் ஜெபத்தைக் கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். கடவுளிடம் எவ்வாறு பணிவு காட்ட வேண்டும் என்பதைக் குறித்துக் கற்றுக்கொண்டார்கள். சாலமோன் ஜெபம் செய்து முடித்ததும் வானத்திலிருந்து நெருப்பு வருகிறது.

ஆலயத்தின் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருந்த எல்லாப் பலிகளையும் எரித்துப்போடுகிறது. வானிலிருந்து வந்த பிரகாசமான ஒளி ஆலயத்தை நிரப்பியது. கடலைப் போல் திரண்டிருந்த மக்கள் ஆரவாரத்துடன் கடவுள் காட்டிய அடையாளம் முன்பாக மண்டியிட்டு ஆலயத்தை வணங்கினார்கள். கடவுள் நம் வார்த்தைகளுக்குக் காதுகொடுப்பார் என்பதை அவ்வளவு பேரும் புரிந்துகொண்டார்கள்.
Tags:    

Similar News