ஆன்மிகம்

இறைவேண்டலில் நிலைத்திருப்போம்

Published On 2017-11-30 09:37 IST   |   Update On 2017-11-30 09:37:00 IST
ஜெபம் என்றும் இறை-மனித உறவு வழியாக ‘அருள்’ என்னும் திரவம் நாள்தோறும் நம்மில் சுரக்கட்டும்.
“விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார்” (மத்தேயு 7:11) “ஆண்டவரே! நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்தீர். என் மனதிற்கு வலிமை அளித்தீர்” (திருப்பாடல் 138:3) ஜெபத்தின் ஆற்றலைப்பற்றி இன்று நாம் தியானிக்கிறோம்.

‘ஜெபம்‘ என்பது இறைவனுடன் கூடிய உறவு. இந்த இறை-மனித உறவு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத மூலக்கூறு. நீரில் வாழும் பறவைகளை கவனித்து பாருங்கள். அப்பறவைகள் எவ்வளவு நேரம் நீந்தினாலும், நீரிலிருந்து எழும்பியதும் தம் இறக்கைகளை விரித்து பறக்கின்றன. நீண்ட நேரம் நீந்தினாலும் சோர்வுற்று நீரில் மூழ்கி சாகாமல் இருப்பதன் ரகசியம் தான் என்ன?

நீரில் நீந்தும் இப்பறவைகள் ஒரு வகையான திரவத்தை சுரந்து, அதனை தம் அலகுகளால் தங்களது மேனி முழுவதும் பூசிக்கொள்கின்றன. அதுபோல ‘ஜெபம்‘ என்பது பிறவிக்கடலில் நீந்தும் நாம் அதில் மூழ்கி அழிந்து போகாமல், நீந்தி கடந்து விண்ணுலகை நோக்கி சிறகடித்து பறப்பதற்காக நமக்குள்ளே சுரக்கும் ‘இறையருள்’ என்னும் அற்புத திரவமாகும்.

நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள், நீரை சுரப்பது எவ்வளவு நிதர்சனமோ அவ்வளவு நிதர்சனம் ஜெபம் அருளை சுரப்பது என்று மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெற்ற பிரான்சு நாட்டை சேர்ந்த மருத்துவர் அலெக்சிஸ் கேரல் கூறுகிறார். ஜெபம் என்றும் இறை-மனித உறவு வழியாக ‘அருள்’ என்னும் திரவம் நாள்தோறும் நம்மில் சுரக்கட்டும். அப்போது நாமும் நீர்ப்பறவைகள் போல் பிறவிக்கடலில் எவ்வளவு நேரம் நீந்தினாலும் சிறகடித்து பறந்து கொண்டே இருக்கலாம்.

எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதை உணரவும், அதேவேளையில், அவருடன் நாம் இருக்கிறோம் என்பதையும் உறுதி செய்யும் கருவியே ‘ஜெபம்‘ என்பதை உணர்ந்து இறை வேண்டலில் நிலைத்திருப்போம். (உரோமையர் 12:12)

அருட்திரு பி.செல்வராஜ், பங்குத்தந்தை, மறவபட்டி.

Similar News