ஆன்மிகம்
புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய தேர்பவனி நடந்த போது எடுத்த படம்.

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய தேர்பவனி

Published On 2017-10-09 09:15 IST   |   Update On 2017-10-09 09:15:00 IST
புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 8-ம் திருநாளன்று 15 ஏழை ஜோடிகளுக்கு ஆலயத்தில் இலவச கூட்டு திருமணம் நடந்தது.

9-ம் திருநாளன்று மாலையில் நற்கருணை பவனி நடந்தது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து இரவில் அன்னையின் தேர்ப்பவனி நடந்தது.

11-ம் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. இதில் பங்குதந்தைகள் அந்தோணி ஜெகதீசன் அடிகளார் (கூடுதாழை), சில்வஸ்டர் அடிகளார் (சேர்ந்தபூமங்கலம்), கிளாரன்ஸ் தினேஷ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அன்னையின் தேர்பவனி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர்.

12-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா திருப்பலி, சப்பர பவனி, மாலையில் நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை கிஷோக் அடிகளார், உதவி பங்குதந்தை வினிஸ்டன் அடிகளார் மற்றும் ஊர் கமிட்டி தலைவர் செல்வராஜ், துறைமுக கமிட்டி தலைவர் மனோகரன், ஆலய கமிட்டி தலைவர் டெலிகட் லோபோ ஆகியோர் தலைமையில் செய்திருந்தனர்.

Similar News