ஆன்மிகம்
மணப்பாடு திருச்சிலுவை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

மணப்பாடு திருச்சிலுவை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-09-05 09:22 IST   |   Update On 2017-09-05 09:22:00 IST
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடு திருச்சிலுவை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் மணப்பாடு திருச்சிலுவை ஆலயமும் ஒன்றாகும். ஆலயத்தில் ஆண்டுதோறும் மகிமை திருவிழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 438-வது மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலையில் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி நடந்தது. காலையில் திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன், ஆலய கொடிமரத்தில் மகிமை திருவிழா கொடியேற்றினார். விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

10-ம் திருநாளான வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மகிமை திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

11-ம் திருநாளான 14-ந் தேதி அதிகாலை 4.30 மணி, 5 மணிக்கு திருப்பலி, 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மகிமை திருவிழா திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடக்கிறது. மாலையில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை இருதயராஜ் பர்னாந்து, உதவி பங்குதந்தை ஜஸ்டின் குழந்தைராஜ், ஆன்மிக குரு தெயோபிலஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News