ஆன்மிகம்

ராமேசுவரம் அருகே தூய சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2017-07-17 10:12 IST   |   Update On 2017-07-17 10:12:00 IST
தூய சந்தியாகப்பர் ஆலய 475-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் மும்மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் உள்ளது தூய சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தின் முகப்பு பகுதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை குறிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. ஆலய திரு விழாவில் மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள். இந்நிலையில் சந்தியாகப்பர் ஆலய 475-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சந்தியாகாப்பரின் உருவம் பதித்த கொடியை பங்கு தந்தை ஆனந்த் ஏற்றி வைத்தார். இதில் ஆலய பங்கு தந்தை ராஜஜெகன், விழாக்குழு தலைவர் அந்தோணிசந்தியாகு, தங்கச்சிமடம் ஜமாத் தலைவர் பசீர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசிலன், முன்னாள் ஜமாத்தலைவர் ராஜசாகிப், இந்து சமூக தலைவர் கோவிந்தன், பவர் நாகேந்திரன் மற்றும் தண்ணீர் ஊற்று, அரியாங்குண்டு, தென்குடா உள்பட 7 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் உள்பட மும் மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 24-ந்தேதி தேர் பவனியும், இரவு 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், இரவு 9 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய சந்தியாகப்பர் ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Similar News