ஆன்மிகம்
தூய இருதய ஆலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியின்போது பாதிரியார், பெண்களுக்கு சாம்பல் பூசி, ஆசி வழங்கிய காட்சி.

தஞ்சை தூய இருதய ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு

Published On 2017-03-02 09:15 IST   |   Update On 2017-03-02 09:15:00 IST
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
எருசலேம் பெத்லகேமில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இறைபணியை தொடங்குவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசத்தை கடைபிடிக்கிறார்கள். இதனை தவக்காலம், லெந்துகாலம், கஸ்தி நாட்கள் என்றும் அழைப்பர். தவக்காலம் நேற்று தொடங்கியது. இதை சாம்பல் புதன் என்றும் கடைப்பிடிக்கிறார்கள். அதையொட்டி தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை திரு இருதய பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு பேராலய பங்குத்தந்தை செபஸ்டின்பெரியண்ணன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. திருப்பலியில் புனித சடங்காக கடந்த ஆண்டில் குருத்துதோலை ஞாயிறு பவனியில் எடுத்துச்செல்லப்பட்ட குருத்தோலைகள் கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததை ஆலயங்களில் புனிதப்படுத்தி எரித்தனர்.

பின்னர் அதன் சாம்பலை திருப்பலியில் கலந்து கொண்டவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் பூசினர். தவக்காலம் தொடங்கி கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாள் வரை 40 நாட்கள் விரதம் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News