ஆன்மிகம்
கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழாவையொட்டி தேர்ப்பவனி நடந்த போது எடுத்த படம்.

ராமன்புதூர் கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய தேர்ப்பவனி

Published On 2017-01-03 11:15 IST   |   Update On 2017-01-03 11:15:00 IST
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழாவில் தேர்ப்பவனி நடந்தது. இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கொடியேற்றி வைத்தார்.

தொடர்ந்து, வந்த திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, ஜெபமாலை போன்றவை நடந்தன. திருவிழாவின் இறுதி நாளான 10-ம் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு ஆடம்பர திருப்பலி நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட முதன்மைபணியாளர் சாலமோன் கலந்து கொண்டு மறையுரை வழங்கினார்.

பிற்பகல் ஆலய வளாகத்தில் இருந்து பிரமாண்ட தேர்ப்பவனி தொடங்கியது. பவனியானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு ஆலய வளாகத்தை சென்றடைந்தது. முன்னதாக தேர் ராமன்புதூர் சந்திப்பு வந்த போது, பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் ஊர் தலைவர் ஸ்டீபன் செல்வராஜ், செயலாளர் ராஜேஷ்வரன், பொருளாளர் தாமஸ் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தேர் ஆலயம் சென்றடைந்ததும் திருப்பலி நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்குமக்கள் செய்திருந்தனர்.

Similar News