ஆன்மிகம்

கோவையில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்பவனி

Published On 2016-12-05 11:55 IST   |   Update On 2016-12-05 11:55:00 IST
கோவை சவேரியார்பாளையத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
கோவை சவேரியார்பாளையத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த ஆலயத்துக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் திருப்பூர், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த ஆலய தேர்த்திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி, தியான மறையுரை, நற்கருணை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளான அளவில் கலந்துகொண்டனர். இறந்தோர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும, பங்கு மக்கள் மற்றும் குடும்பங்கள், மறை பணியாளர்களுக்காக பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. தேர்பவனியை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தொடங்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சவேரியாரின் சொரூபம் வைக்கப்பட்டு கல்லறை வீதி, மாதாகோவில் வீதி, தேர்வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வீதியெங்கும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் திரண்டு நின்று புனித சவேரியாரை தரிசித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குகுரு ஜெகன்ஆண்டனி, உதவி பங்கு குரு ரோச் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Similar News