ஆன்மிகம்

பழமை மாறாமல் வேளாங்கண்ணி பேராலயம் புதுப்பிக்கும் பணி

Published On 2016-11-03 08:23 IST   |   Update On 2016-11-03 08:23:00 IST
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. வங்க கடலோரத்தில் பிரமாண்டமாக அமைந்து உள்ள இந்த பேராலயம், பாகுபாடின்றி அனைத்து மதத்தினரும் வழிபடும் புண்ணிய தலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு அரிதாக கிடைக்கக் கூடிய பசலிக்கா அந்தஸ்தை பெற்றுள்ளது இந்த ஆலயம்.

இந்தியாவில் பிரமாண்ட கட்டிட வடிவமைப்புடன் 5 கிறிஸ்தவ ஆலயங்களே உள்ளன. இவற்றுள் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று. எனவே வேளாங்கண்ணி பேராலயத்திற்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து, புனித ஆரோக்கியமாதாவை வழிபட்டுச் செல்கிறார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் திருவிழா தொடங்கும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள்.

பிரமாண்ட கட்டிட வடிவமைப்பை கொண்ட இந்த ஆலயத்திற்கு வண்ணம் பூசும் பணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆலயத்தின் பின்பகுதியை புதுப்பிக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. தற்போது முகப்பு பகுதியில் சாரம் அமைத்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Similar News