கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்

Published On 2022-06-30 05:08 GMT   |   Update On 2022-06-30 05:08 GMT
  • திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.
  • மதுரை அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

திண்டுக்கல்:

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கியது. நெல்லையில் 6 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், எஞ்சிய ஆட்டங்கள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

2 நாள் இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.

பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

நெல்லை அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் தோற்கடித்தது. அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

திண்டுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது போட்டியில் 5 விக்கெட்டில் கோவை கிங்சை வீழ்த்தியது. 2-வது வெற்றி வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

மதுரை அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கோவை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் தோற்றது. மதுரை அணி 2-வது வெற்றிக்காகவும், கோவை முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

Tags:    

Similar News