டி20 உலக்கோப்பையில் ஷாகின் அப்ரிடி- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
- தனது புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு உள்ள அவர் புயலுக்கு முன் அமைதி என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு அவர் தயாராகி விடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
லாகூர்:
டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. பாகிஸ்தான அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக விலகி இருந்தார்.
இதனால் அவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடவில்லை. காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் முழு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஷாகின் அப்ரிடி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகிறது. எதிர்பார்த்தபடியே ஷாகின் அப்ரிடி உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற்று வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு அவர் தயாராகி விடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கூறியதாவது:-
டி20 உலகக்கோப்பைக்கு 110 சதவீதம் உடல் தகுதியுடன் ஷாகின் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஷாகின் அப்ரிடி பங்கேற்பார் என தெரிகிறது. ஷாகின் அப்ரிடி தனது வேகப் பந்துவீச்சால் ரோகித் சர்மா கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட்டை கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தினார். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஷாகின் அப்ரிடி காயமடைந்தது இந்தியாவுக்கு சாதகம் என கருதப்பட்டது. ஆனால் அவர் திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார். இதனால் சோகத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இதனிடையே இந்த செய்தியை ஷாகின் ஆப்ரிடி, தனது டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
Calm before the storm 🏏 pic.twitter.com/pLtd85tOyR
— Shaheen Shah Afridi (@iShaheenAfridi) October 6, 2022
அதில் தனது புகைப்படத்தை பதிவிட்டு உள்ள அவர் புயலுக்கு முன் அமைதி என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இது டி20 உலகக்கோப்பைக்கு தான் தயாராகி விட்டேன் என்பதை மறைமுகமாக கூறுகிறார் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்திய அணியில் பும்ரா காயம் அடைந்து விலகிய நிலையில் பாகிஸ்தான் வீரர் முழு உடல் தகுதியை பெற்றிருப்பது இந்திய ரசிகர்களுடைய விரக்தி அடையச் செய்துள்ளது.