கிரிக்கெட்

மயங்க் அகர்வால் - ரிஷப் பண்ட் 

5-வது டெஸ்ட் போட்டி: காத்திருப்பு பட்டியலில் மயங்க் அகர்வால்- துணை கேப்டனாக பண்ட் நியமனம்

Published On 2022-06-18 10:54 GMT   |   Update On 2022-06-18 10:54 GMT
  • கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை.
  • ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார்

இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ளது.

முதல் பயணமாக கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, சமி, அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், சர்துல் தாகூர், பிரிதிஷ் கிருஷ்ணா, புஜாரா, ஹனுமன் விஹாரி, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகியோர் லண்டன் சென்றடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பிறகு இரண்டாவது பயணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோர் லண்டன் செல்ல உள்ளனர்.

இந்நிலையில் கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நாளைக்குள் அவர் அணியில் இடம் பெறுவாரா? இல்லையா என்பது குறித்து தகவல் தெரியும். ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

Similar News