கிரிக்கெட்

அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும்- இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் நம்பிக்கை

Published On 2023-02-23 05:48 GMT   |   Update On 2023-02-23 05:48 GMT
  • மனரீதியான நிலையில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம்.
  • முதலில் பந்து வீசினால் 140 முதல் 150 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம்.

கேப்டவுன்:

8-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கியது. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. நேற்று முன் தினத்தோடு 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன.

இதன் முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா (குரூப்1), இங்கிலாந்து, இந்தியா (குரூப்2) ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் (குரூப்1), வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து, (குரூப்2) ஆகிய நாடுகள் 'லீக்' முடிவில் வெளியேறின.

நேற்றைய ஓய்வுக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் கேப்டவுனில் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 2020 ஆண்டு நடந்த உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 85 ரன்னில் தோற்று இருந்தது. அதற்கு இன்று பதிலடி கொடுக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் சவாலை எதிர் கொள்வது கடினமே. அந்த அணி இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. இந்திய அணி 3 போட்டி களில் வெற்றி (பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து) பெற்றது. இங்கிலாந்திடம் மட்டுமே தோற்றது.

5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 7-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை எங்களால் தோற்கடிக்க முடியும் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மனரீதியான நிலையில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். எந்த அணி மனதளவில் வலிமையாக இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும். ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்ததுதான். ஆனால் எங்களால் அவர்களை தோற்கடிக்க முடியும்.

ஆடுகளம் நன்றாக இருக்கிறது. பேட்டிங் நன்றாக அமைந்தால் 180 ரன் வரை இலக்கு நிர்ணயிப்போம். முதலில் பந்து வீசினால் 140 முதல் 150 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம்.

இவ்வாறு ரிச்சா கோஷ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News