முதல் டி20 போட்டி- இந்தியா வெற்றி பெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து
- மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.
- முதலில் விளையாடிய அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 64 ரன்கள் குவித்தார்.
டப்ளின்:
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்ததால், ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இதையடுத்து 12 ஓவர் என்ற அளவில் ஆட்டம் குறைக்கப்பட்டது.
பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாடியது.