ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட்.. இலங்கை 268 ரன்கள் குவிப்பு
- ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி மற்றும் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டாவில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசாங்க - கருரத்ணே களமிறங்கினர். 4 ரன்கள் இருந்த போது கருரத்ணே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெண்டிஸ் 11 ரன்னிலும் மேத்யூஸ் 12 ரன்னிலும் அவுட் ஆகினர்.
84 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. இதனையடுத்து அசலங்கா - டி செல்வா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படித்திய டி செல்வா 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சனகா 17 ரன்னிலும் தசுன் ஹெமந்தா 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி மற்றும் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.