ஜோஸ் பட்லர் அதிரடி - 232 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
- முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- அதிரடியாக ஆடிய இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஆம்ஸ்டெல்வீன்:
நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 498 ரன்கள் குவித்தது. சால்ட் 93 பந்துகளில் 122 ரன்னும், டேவிட் மலான் 125 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 47 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 66 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்து இங்கிலாந்து உலக அணி சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து, 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. ஆனால், நெதர்லாந்து 49.4 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இங்கிலாந்து 232 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.