ஆஸ்திரேலியாவிடம் தோல்வி- பாகிஸ்தான் அணி மீது சோயிப் அக்தர் பாய்ச்சல்
- பாகிஸ்தான் 45.3 ஓவரில் 305 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
- வார்னர் 13 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்சை தவற விட்டது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
இஸ்லாமாபாத்:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 367 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் (163 ரன்), மிட்செல் மார்ஷ் (121 ரன்) சதம் அடித்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 45.3 ஓவரில் 305 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இப்போட்டியில் டேவிட் வார்னர் 13 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்சை தவற விட்டது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
இந்தநிலையில் பாகிஸ்தான் வீரர்கள் மீது முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்திலேயே பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கி விக்கெட்டுகளை எடுக்க முடியாத நீங்கள் குறைந்தபட்சம் எதிரணி பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்சையாவது பிடித்திருக்க வேண்டும். பேட்டிங், பீல்டிங்கில்தான் சொதப்புகிறீர்கள் என்றால் வெற்றிக்கு அடித்தளமாக அமையக்கூடிய கேட்ச்சுகளை எதிரணி தாமாக கொடுத்தும் அதை தவறவிடலாமா? உங்களால் விக்கெட்டுக்களை எடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியாத போது கேட்ச் வாய்ப்புகளை சரியாக பிடியுங்கள். நீங்கள் இவ்வாறு அதிகமாக கேட்சுகளை தவறவிடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.