சினிமா

பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர் சோ : ரஜினிகாந்த் அஞ்சலி

Published On 2016-12-07 11:05 IST   |   Update On 2016-12-07 11:49:00 IST
பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர் சோ என்று அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபிறகு ரஜினிகாந்த் பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட சோ.ராமசாமி இன்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சோ வின் நெருங்கிய நண்பரும், சக நடிகருமான ரஜினி நேரில் வந்து சோ-வின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் பேசும்போது, 1978-ஆம் ஆண்டிலிருந்து எனக்கு சோ நல்ல நண்பர். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறையாவது அவரை சந்திப்பேன்.

பத்திரிகை துறையில் பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தவர். பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர். அவர் பொய் சொல்லி இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை. அவரது நட்பு வட்டாரம் தமிழகம் மட்டுமல்ல, டில்லி வரை வளர்ந்து கிடந்தது. மொராஜி தேசாய், வாஜ்பாயிலிருந்து இப்போது மோடி வரை அவருக்கு நன்கு பழக்கமானவர்கள். இவ்வளவு பெரிய மனிதரின் இழப்பு சாதாரணமானது இல்லை என்று கூறினார்.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படம் வெளியானபிறகு, அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த ரஜினி முதன்முதலாக சோ ராமசாமியை நேரில் அழைத்து அவருக்கு ‘கபாலி’ படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News