சினிமா
ஆனந்த் ராஜன் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிருசா குரூப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யுத்த காண்டம்’ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமா, புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது இங்கே புதுமைகள் மலர்ந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் அமைந்த புதிய படம், ‘யுத்த காண்டம்.’ இது, ஒரே ஷாட்டில் படமாகி இருக்கிறது. ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாகவும், ‘கோலி சோடா-2’ படத்தில் நடித்த கிருசா குரூப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சுரேஷ்மேனன், யோக் ஜேபி, போஸ் வெங்கட் மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். ஆனந்த் ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார். இவர், டைரக்டர் சமுத்திரக்கனியிடம் உதவி டைரக்டராக இருந்தவர். பத்மாவதி, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.
படத்தை பற்றி டைரக்டர் ஆனந்த்ராஜன் கூறியதாவது: “இது, யதார்த்த சினிமா. நேர்த்தியான வர்த்தக படமாகவும் இருக்கும். 50 நாட்கள் ஒத்திகை பார்த்த பின்னரே படப்பிடிப்பை தொடங்கினோம். ஒரு விபத்தில் சிக்கிய கதாநாயகனும், கதாநாயகியும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் காவல் நிலையத்துக்கு ஏன் சென்றார்கள்? என்பது கதை. படம் ஆரம்பித்து 5-வது நிமிடத்தில், ‘சிங்கிள் ஷாட்’டில் உருவான படம் என்பதை ரசிகர்கள் மறந்து விடுவார்கள்”.