"தி காஷ்மீர் பைல்ஸ்" இழிவான படம்... கோவா திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவர் பேச்சால் சலசலப்பு
- மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து
- கோவா திரைப்பட விழாவில் இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை.
புதுடெல்லி:
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார். அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேர்வுக்குழு தலைவரின் கருத்துக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் அக்னிஹோத்ரி பதில் அளித்துள்ளார். ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என அவர் காட்டமாக கூறி உள்ளார்.