சினிமா செய்திகள்

பேரரசு

விளம்பரங்களில் நடிப்பவர்கள் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது.. இயக்குனர் பேரரசு

Published On 2023-04-21 07:42 GMT   |   Update On 2023-04-21 07:42 GMT
  • மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
  • இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி, சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை ஏ.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை நடைபெற்றது.


விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி


இதில் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், மயில்சாமியின் மகன் அன்பு, படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து. அப்படி நல்ல மனிதர்களை சம்பாதித்தவர் தான் மயில்சாமி. எஸ்பிபி, விவேக், அடுத்து மயில்சாமி உள்ளிட்ட சிலரின் மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. நம் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்தது போன்ற உணர்வை தந்தன.


விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

மயில்சாமி ஒரு சிவ பக்தர் மட்டுமல்ல அவர் தீவிரமான எம்ஜிஆர் பக்தரும் கூட. ஆனால் அந்த இருவருக்குமே அவர் உண்மையாக இருந்தார். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி முதலமைச்சர், அமைச்சர் என பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் பின்னால் அவர் பெயரை சொல்லவே மறந்து விட்டார்கள். ஆனால் தான் இறக்கும் வகையில் எம்ஜிஆரின் உண்மை தொண்டனாகவே அவர் பெயர் சொல்லும் விதமாக வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி. அதுமட்டுமல்ல தான் நடித்த கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவே நடித்துவிட்டு சென்றுள்ளார். முதல் படத்திலேயே சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்ன இயக்குனர் என இந்த குறும்பட இயக்குனர் ராகுல் தனது நெஞ்சை நிமித்தி அமரலாம்.


விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

விளம்பரத்தில் நடிக்கும்போது நடிகர் நடிகைகளுக்கு பொறுப்பு வேண்டும். காரணம் மக்கள் உங்களை நம்புகிறார்கள். முதலில் நீங்கள் நடிக்கும் விளம்பரம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அந்த பொருளை ஒரு மாதம் வரை நீங்கள் முதலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். சரியில்லாத ஒன்றை சரி என நம்மை நம்பும் மக்களிடம் கொடுப்பது நம்பிக்கை துரோகம்" என்று கூறினார். 

Tags:    

Similar News