படப்பிடிப்பில் மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் காப்போம்.. சிறுத்தை சிவா பதிவு
- 'சிறுத்தை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சிவா.
- தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.
கார்த்தி நடிப்பில் வெளியான 'சிறுத்தை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பின்னர் அஜித் நடிப்பில் 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படங்களை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சிறுத்தை சிவா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் 'ஒலி மாசை ஒழிப்போம்' எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் வெளிப்புற மற்றும் ஸ்டுடியோ தளங்களில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஒலி மாசு அற்ற பகுதியாக மாற்ற நாம் உறுதி ஏற்போம். அதை சாத்தியப்படுத்த அதிக சத்தம் எழுப்பும் ஒலி எழுப்பிகளை படப்பிடிப்பு தளங்களில் தவிர்த்துப் படக்குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாமல் காப்போம். ஒலி மாசை ஒழிப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sai sai 🙏🙏 pic.twitter.com/XFhXPAFMrs
— siva+director (@directorsiva) August 24, 2022