சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

Published On 2023-12-24 00:37 GMT   |   Update On 2023-12-24 04:19 GMT
  • இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் நடிகர் போண்டா மணி உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் போண்டா மணி நடித்துள்ளார்.

சென்னை:

கே.பாக்யராஜ் நடித்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி.

வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூர் மாப்ளே, வின்னர், வசீகரா, ஏய், வேலாயுதம், என்னைப் பார் யோகம் வரும் உள்பட சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த, அண்ணே போலீஸ்காரங்க வருவாங்க எதுவும் சொல்லிடாதீங்க. அடிச்சுகூட கேட்பாங்க அப்பவும் எதுவும் சொல்லிடாதீங்க என்று குளத்தில் மூழ்கி செல்லும் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானது.

இதற்கிடையே, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 கிட்னியும் செயலிழந்த நிலையில் மாற்று கிட்னி அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்துள்ளார்.

பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் உதவி செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு 11 மணிக்கு வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போண்டா மணி ஒரு இலங்கை தமிழர் ஆவார். கேவிஸ்வரன் என்ற பெயருடன் இலங்கையில் இருந்து அகதியாக தமிழகத்துக்கு வந்தார். பசியின் காரணமாக அடிக்கடி போண்டா வாங்கி சாப்பிடுவதால் நண்பர்கள் அவரை போண்டா மணி என்றழைத்தனர். இதுவே சினிமாவிலும் அவருக்கு பெயராக அமைந்தது.

இலங்கை போரில் போண்டா மணியின் தந்தை அவர் கண் முன்பே குண்டடிப்பட்டு இறந்துவிட்டார். தாயார் காணாமல் போய்விட்டார்.

போண்டா மணிக்கு நடிகர் வடிவேலு தான் பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தார். போண்டா மணிக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் வேல்ஸ் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப் படிப்பும், மகன் 11-வது வகுப்பும் படித்து வருகின்றனர்.

போண்டாமணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News