சினிமா செய்திகள்
ரஜினிகாந்த்

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்... கைவிடமாட்டான் - ரஜினி

Published On 2021-12-25 05:31 GMT   |   Update On 2021-12-25 05:31 GMT
நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்... கைவிடமாட்டான் என்று கூறியிருக்கிறார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது அண்ணாத்த படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினர். இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தங்க செயின் பரிசளித்தார். 

பின்னர் அவர்களுடன் சிலமணி நேரம் கலந்துரையாடியபோது, ‘‘அண்ணாத்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பிறகும் தமிழகத்தில் பல தியேட்டர்களில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தியேட்டர் அதிபர்களும் போனில் தொடர்பு கொண்டு சந்தோஷப்பட்டனர். இந்தியிலும் படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. உங்களை சந்தித்தது மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.



மேலும் ரஜினிகாந்த் ஹூட் செயலியில் பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பல இடர்களை தாண்டி அண்ணாத்த படத்தை முடித்தோம். எதிர் விமர்சனம், மழை, ஆகியவற்றை கடந்து அண்ணாத்த படம் வெற்றி பெற்றுள்ளது. மழை இல்லையென்றால் படம் இன்னும் பெரிய வெற்றியடைந்து இருக்கும். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிடமாட்டான்’’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News