சினிமா
சரண்யா சசி

கவலைக்கிடமான நிலையில் நடிகை சரண்யா சசி

Published On 2021-07-03 16:07 IST   |   Update On 2021-07-03 16:07:00 IST
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை சரண்யா சசி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசிக்கு மலையாள நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வருகிறார்கள்.



இந்தநிலையில் சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் 23-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது என்றும் அவரது தோழியும் மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்து உள்ளார். சரண்யா சசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News