சினிமா
விஷால் புகாருக்கு ஆர்.பி.சௌத்ரியின் பதில்
தன் மீது காவல்நிலையத்தில் நடிகர் விஷால் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதற்கு, தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தற்போது பதிலளித்துள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து, நடித்த இரும்புத்திரை படத்துக்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அப்போது விஷால் அளித்த உறுதிமொழிப் பத்திரம் மற்றும் காசோலைகளை, கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் ஆர்.பி.சௌத்ரி தரவில்லை என்பது விஷாலின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக அவர் ஆர்.பி.சௌத்ரி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதற்கு ஆர்.பி.சௌத்ரி தற்போது பதிலளித்துள்ளார்.
அதில், இரும்புத்திரை படத்துக்காக விஷால் என்னிடமும், திருப்பூர் சுப்பிரமணியத்திடமும் கடன் வாங்கினார். அது தொடர்பான ஆவணங்களை ஆயுதபூஜை படத்தை இயக்கிய சிவகுமார் கவனித்து வந்தார்.
துரதிர்ஷ்டவசமாக அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் பொறுப்பில் இருந்த ஆவணங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் பணத்தை திருப்பி தந்த போது, அதனை பெற்றுக் கொண்டதாக நாங்கள் எழுதி கையொப்பம் இட்டு தந்த பிறகும், தொலைந்து போன ஆவணங்கள் கிடைத்துவிட்டால், அதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சனை வருமோ என விஷால் பயப்படுகிறார்" என்று ஆர்.பி.சௌத்ரி விளக்கமளித்துள்ளார்.
மேலும் தற்போது கொடைக்கானலில் இருக்கும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ஓரிரு நாட்களில் சென்னை திரும்பி இந்த பிரச்சினையில் சரியான விளக்கம் தருவதாகவும், விரைவில் இந்த விஷயத்தை தீர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.