சினிமா
கொரோனா காரணமாக வெளிநாடு செல்ல முடியாமல் தவிக்கும் ரஜினி பட நடிகை
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக ரஜினி படத்தில் நடித்த நடிகை, வெளிநாடு செல்ல முடியாமல் வருத்தத்தில் இருக்கிறார்.
மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்மா உள்ளிட்டோர் நடித்த ”பேட்ட” திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுக நாயகியாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதற்குள் மாளவிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். இவர் அடுத்ததாக நடிகர் தனுஷுடன் இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியானது. இப்படி பிசியாக இருக்கும் மாளவிகா, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அவர் நியூயார்க் நகரத்திற்கு நிச்சயம் போய்விடுவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக நியூயார்க் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வருத்தத்தில் இருக்கிறார். நியூயார்க் செல்வதற்கு பதிலாக நியூயார்க்கில் இருப்பது போன்ற உடையாவது அணிந்து கொள்வோம் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு குளிர்கால உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.