சினிமா
பா.இரஞ்சித்

புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் அது - பா.இரஞ்சித்

Published On 2020-12-25 10:24 GMT   |   Update On 2020-12-25 10:24 GMT
புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று இயக்குனர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ வானம்” போன்ற பண்பாட்டு மீட்பு இசை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் “நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் மாபெரும் இசைத்திருவிழா நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது. 

இந்த நிகழ்ச்சியினை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா. இரஞ்சித் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று நாட்டுபுறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மதிப்புறு முனைவர் மதிச்சியம் பாலா, சுகந்தி, வி.எம். மஹாலிங்கம் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடினர். சேலம் ஆதிமேலம் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும், வேலு ஆசான் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து இயக்குனர் பா. இரஞ்சித் பேசியதாவது, ”மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. நான் கருப்பினத்தவர்களின் கலை அரசியலை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறேன். அது போன்று இங்கே இருக்கின்ற மக்களை கலை, பண்பாட்டு ரீதியாக அரசியல் படுத்த வேண்டும் எனும் நோக்கத்தோடு தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏன் என்றால், இந்த நிகழ்ச்சி மக்களிடையே ஓர் எதிர்ப்புரட்சியை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் தற்போது திரையிசையில், பறையிசை என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. இந்த இசையை நாம் மேடை ஏற்றி, அதன் மூலம் மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதன் பிரதிபலிப்பு தான் இந்த நிகழ்ச்சி. மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’” என்று கூறினார். 
Tags:    

Similar News