சினிமா
எஸ்.பி.பி. பணியாற்றிய கடைசி படம் ‘வா பகண்டையா’
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக ‘வா பகண்டையா’ என்ற படத்திற்காக இரண்டு பாடல்களை பாடினாராம்.
தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘வா பகண்டையா’.
‘வா பகண்டையா’ என்பது கிராமத்தின் பெயர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ‘வா பகண்டையா’ என்ற கிராமம் தான் கதைக்களம் என்பதால், படத்திற்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். ஹீரோவாக அறிமுக நடிகர் விஜய தினேஷ் நடிக்க, அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாக நடிக்கிறார். ஒளி ரெவல்யூசன் சார்பில் ப.ஜெயகுமார் இப்படத்தை தயாரிப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ப.ஜெயகுமார் கூறியதாவது: “காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த முழுமையான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், சமூகத்திற்கு தேவையான மெசஜ் ஒன்றை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்துள்ளது.
குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய “வெங்காட்டு சந்தையிலே விலை போகா வெள்ளரிக்கா...” மற்றும் “தாயவள் தந்த அன்பினை போல தேடிய செல்வம் தருமா...” என்று தொடங்கும் இந்த இரண்டு பாடல்கள் ரொம்பவே ஸ்பெஷல். காரணம், எஸ்.பி.பி அவர்கள் பாடிய கடைசி பாடல்கள் இவை.
தற்போது வரை எங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக இருக்கும் இந்த பாடல்கள் வெளியான பிறகு ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் பாடலாக இருக்கும். ஜனவரி மாதம் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம்.” என்றார்.