சினிமா
கார்த்தி

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கார்த்தி

Published On 2020-12-03 13:51 GMT   |   Update On 2020-12-03 13:51 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் கார்த்தி அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கொரொனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாகப் பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது.

நாளும், பொழுதும் பாடுபட்டால் தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு, கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப் பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.



தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளைப் பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்டப் பல பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் உழவர் சமூகம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாக பாதிப்படைவோம் என கருதுகிறார்கள்.

தங்கள் மண்ணில் தங்களுக்கிருக்கும் உரிமையும், தங்கள் விளைப் பொருட்கள் மீது தங்களுக்கிருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்றும், ஆகவே இந்தச் சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. ஆகவே, போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு: அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News