சினிமா
டாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள்
பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தன்னுடைய பட வாய்ப்புகளை தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்.
ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானவர் டாப்சி. வந்தான் வென்றான், காஞ்சனா-3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் வாரிசு நடிகர்கள் புதிய படங்களில் தன்னை ஒப்பந்தம் செய்ய விடாமல் தடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து டாப்சி கூறியதாவது:-
சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களின் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு தொடர்புகள் அதிகம் கிடைக்கிறது. இதனால் சினிமா வாய்ப்புகளை எளிதாக பெற்று விடுகின்றனர். ஆனால் வெளியில் இருந்து வரும் நடிகர் நடிகைகள் பிரபலங்களுடன் அறிமுகமாகவும் தொடர்புகளை உருவாக்கவும் அதிக நாட்கள் தேவைப்படும்.
இயக்குனர்கள் வெளியில் இருந்து வருபவர்களை நடிக்க வைப்பதற்கு பதிலாக தனக்கு தெரிந்தவர்களையே நடிக்க வைக்கின்றனர். நான் வாரிசுகள் ஆதிக்கத்தினால் சில பட வாய்ப்புகளை இழந்து வேதனைப்பட்டேன். இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதற்கு ரசிகர்களும் காரணம். சினிமா குடும்பத்தில் இருந்து அறிமுகமாகிறவர்களின் படங்களை பார்க்கவே அவர்கள் ஆர்வமாக செல்கிறார்கள். மற்றவர்கள் படங்களை பார்க்க மறுக்கின்றனர்.
இவ்வாறு டாப்சி கூறினார்.