சினிமா
ரஜினிகாந்த்

ரஜினி வீட்டின் முன் திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

Published On 2020-04-12 11:17 GMT   |   Update On 2020-04-12 11:17 GMT
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தின் முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். பல்வேறு திரைப்பிரபலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பெப்சிக்கு ரூ.50 லட்சத்தை வழங்கினார்.

இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லம் முன்பு நிவாரண நிதி கேட்டு திருநங்கைகள் 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடத்தியுள்ளனர். திருநங்கைகளின் இந்த திடீர் போராட்டத்தால் ரஜினியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் காவலாளி மூலம் ரூ.5 ஆயிரத்தை திருநங்கைகளிடம் வழங்கினார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News