சினிமா
காசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது - கார்த்தி
காசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது என பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதனால் திரைப்படங்களின் படப்பிடிப்பகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது: “நான் சின்ன குழந்தையாக, சிறுவனாக இருந்தபோது அப்பா (நடிகர் சிவகுமார்) ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அப்பாவை நிறைய ‘மிஸ்’ பண்ணியிருக்கிறேன். அந்த குறை, என் மகளுக்கு வரக்கூடாது என்பதற்காக, இந்த ஓய்வு நாட்களை பயன்படுத்திக் கொள்கிறேன். என் மகளுடன் நிறைய நேரத்தை செலவிடுகிறேன்.
தினமும் மூன்று வேளையும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். இப்போதைய சூழ்நிலையில், பெரும்பாலானவர்களுக்கு கையில் காசு இருக்கும். ஆனால் வைத்தியம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால், வீட்டிலேயே இருப்போம்... பாதுகாப்பாக இருப்போம்”. இவ்வாறு அவர் கூறினார்.