சினிமா
பெப்சி தொழிலாளர்களை காப்பாற்ற நடிகர்-நடிகைகள் நிதி வழங்குங்கள் - ஆர்.கே.செல்வமணி
திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர், நடிகைகள் தாமாக முன்வந்து நிதி வழங்குமாறு பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் உறுப்பினர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவச பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே அவர்களுக்கு பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும். எங்கள் வேண்டுகோளை ஏற்று நல்ல இதயம் கொண்டவர்கள் இதுவரை ரூ.1 கோடியே 59 லட்சத்து 64 ஆயிரமும், அரிசி மூட்டைகளும் வழங்கி இருக்கிறார்கள்.
இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை. தமிழ் திரைப்பட துறையில் நல்ல நிலைமையில் இருக்கிற நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையின் அனைத்து பிரிவினரும் திரைப்பட தொழிலாளர்களை காப்பாற்ற நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.