சினிமா
ஏ.ஆர்.ரகுமான்

ரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகிறது - ஏ.ஆர்.ரகுமான்

Published On 2020-02-19 14:03 GMT   |   Update On 2020-02-19 14:03 GMT
ரீமிக்ஸ் பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏ.ஆர். ரகுமான் அறிமுகமான காலம் முதலே இசையில் புதுமைகளை தொடர்ந்து செய்து வருகிறார். டி.டி.எஸ் இசையில் புதிய பாணிகளை கையாண்டது, டிஜிட்டலில் புதிய ஒலிகளை அறிமுகப்படுத்தியது என படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் ஏ.ஆர். ரகுமான் பழைய பாடல்களை ரீமேக் செய்வதில் விருப்பம் இல்லாமலே இருந்து வந்தார். 

புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் பல திரைப்படங்களிலும் இளம் இசை அமைப்பாளர்கள் ரீமேக்கை கையாண்டு வந்த காலகட்டத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கும் ரீமேக் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த நியூ திரைப்படத்திற்காக முதல் முறையாக எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வெளிவந்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்.

இந்த பாடலை கேட்டு எம்.எஸ். விஸ்வநாதன் தனது பாடலின் ஜீவனை கெடுக்காமல் இருந்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி கூறியிருந்தார். சமீபத்தில் வெளிவந்த ஸ்ட்ரீட் டான்சர் படத்திற்காக ஏ.ஆர். ரகுமானின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான ‘முக்காபுலா பாடலை’ இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபு தேவாவுக்காக ரகுமான் வழங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.



தனது பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது: கடந்த 2017ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஓகே ஜானு’ படத்தில் இடம் பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ பாடல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதன் பிறகு ரீமேக் செய்யப்பட்ட எந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கவில்லை. அவற்றில் சில பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருந்தன. 

அந்த ரீமேக் பாடலை உருவாக்கிய நிறுவனத்தை அழைத்து, “இதற்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள். ஆனால், இந்தப் பாடலை நான் வெறுக்கிறேன். இதை நான் ஆதரித்தால் மக்கள் என்னைக் கிண்டல் செய்வார்கள். ரீமிக்ஸ் டிரெண்ட் இப்போது முடிந்துவிட்டது இவ்வாறு அவர் கூறினார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ மற்றும் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
Tags:    

Similar News