சினிமா
நயன்தாரா, டாப்சியை தொடர்ந்து சமந்தா
நயன்தாராவை வைத்து ‘மாயா’, டாப்சியை வைத்து ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக சமந்தாவை வைத்து இயக்க உள்ளார்.
தமிழ் திரையுலகை கடந்த சில வருடங்களாக பேய் படங்கள் ஆக்கிரமித்துள்ளன. குற்ற பின்னணியிலான திகில் படங்களுக்கும் வரவேற்பு இருந்து வருகிறது. புதுமுக டைரக்டர்கள் எல்லோரும் இதை புரிந்து கொண்டு திகில் படங்களை எடுத்து வருகிறார்கள். முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளும் திகில் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘மாயா’ ‘இறவா காலம்’ ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக ஒரு திகில் படத்தை இயக்க இருக்கிறார். அதில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு பிறகு சமந்தா தமிழில் நடிக்கும் படம், இது. அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.