சினிமா
பாதுகாப்பு கோரி போலீஸ் கமிஷனரிடம் காயத்ரி ரகுராம் மனு
நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து பாதுகாப்பு கோரி மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக சாடினார். ட்விட்டரில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அதையும் ட்விட்டரில் வெளியிட்டார். தனக்கு போனில் வரும் அழைப்புகளையும் நேரலை செய்தார். வருகிற 27-ந்தேதி மெரினாவுக்கு வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை சந்தித்து விவாதிக்க தயாரா? என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். திருமாவளவன் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்றும் தெரிவித்தார். இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. விதி முறையை மீறியது காரணமாக காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் போன் மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால் தனக்கும், தன்னுடைய வீட்டிற்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மனு கொடுத்துள்ளார்.