சினிமா
வெளிநாட்டில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்?
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணம் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது விஜய் ஜோடியாக பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து திருமணத்துக்கு அவர் தயாராவதாக கூறப்படுகிறது. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது.
இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பேசுகின்றனர். நயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி இருக்கிறார்.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை” என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
திருமணத்தை வட இந்தியாவில் நடத்தலாமா? அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா? என்று இருவரும் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமணங்கள் வெளிநாட்டில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. திருமண சடங்கு நிகழ்ச்சிகள் 5 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.