சினிமா
சுர்வின் சாவ்லா

5 இயக்குனர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்- நடிகை பரபரப்பு புகார்

Published On 2019-09-26 07:30 IST   |   Update On 2019-09-26 07:30:00 IST
5 இயக்குனர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை சுர்வின் சாவ்லா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
தமிழில் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா. இதில் அர்ஜுன், சேரன், விமல் ஆகியோரும் நடித்து இருந்தனர். அர்ஜுனுடன் ‘ஜெய்ஹிந்த்-2’ மற்றும் ‘புதிய திருப்பங்கள்’ படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 5 இயக்குனர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சுர்வின் சாவ்லா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “என் சினிமா வாழ்க்கையில் 3 முறை தென்னிந்திய பட உலகிலும் 2 முறை இந்தி சினிமாவிலும் பாலியல் தொல்லைகளை சந்தித்தேன். தென்னிந்திய பட உலகில் ஒரு டைரக்டர் உன் உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். அன்று முதல் அவரது போன் அழைப்புகளை எடுப்பது இல்லை.

இன்னொரு முறை தேசிய விருது வாங்கிய டைரக்டரின் படத்தில் நடிக்க கதாநாயகி தேர்வுக்காக சென்ற போது என்னை ஆபாசமான வசனங்களை பேச வைத்து ஏதோதோ செய்தார். எனக்கு உடம்புக்கு சரியில்லை என்று மும்பை திரும்பியபோது நானும் உன்னுடன் மும்பைக்கு வரவா? என்று கேட்டார்.



வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவருக்கு தமிழ் தவிர ஆங்கிலமோ இந்தியோ தெரியாது. இதனால் வேறு ஒருவரை வைத்து என்னிடம் பேசினார். படப்பிடிப்பு தொடங்க கொஞ்ச நாள் ஆகும். அதுவரை நீங்கள் ஒத்துழைத்தால் போதும் அதன் பிறகு நிறுத்தி விடலாம் என்றார். நான் எதை நிறுத்திடனும் என்று கேட்டேன். படப்பிடிப்பு தொடங்குவது வரைதான். 

அதன்பிறகு நீ டைரக்டருக்கு ஒத்துழைக்க வேண்டியது இல்லை என்று மறுபடியும் சொன்னார். நீங்கள் தவறான கதவை தட்டுகிறீர்கள். உங்கள் டைரக்டர் எனக்கு திறமை இருப்பதாக நினைத்தால் நடிக்கிறேன். இல்லாவிட்டால் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அந்த படத்தை இன்றுவரை அவர் ஆரம்பிக்கவே இல்லை.”

இவ்வாறு சுர்வின் சாவ்லா கூறினார்.

Similar News