சினிமா
சம்பள விஷயத்தில் கறார் காட்டுகிறேனா? ரகுல் பிரீத் சிங் விளக்கம்
சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அது குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இந்தி படங்களிலும் நடிக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:- “இதுதான் எனது எல்லை. இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும் என்று முடிவுக்கு வருவது எனக்கு பிடிக்காது. தினமும் புதிய முயற்சி செய்ய வேண்டும்.
நேற்று மாதிரியே இன்றும் நடந்தால் அதில் என்ன விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது செய்வேன். அதுதான் சினிமாவில் இத்தனை நாட்களாக என்னை வைத்து இருக்கிறது. ஆரோக்கியத்துக்கும், உடற்பயிற்சிக்கும் முன்னுரிமை கொடுப்பேன். நான் சாப்பாட்டு பிரியை. எவ்வளவு சாப்பிடுகிறேனோ அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வேன்.
சம்பள விஷயத்தில் நான் கறார் என்று பலரும் பேசுகிறார்கள். எனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு உழைக்க தயாராக இருக்கிறேன். எவ்வளவு சம்பளம் தர முடியும் முடியாது என்பதை முதலிலேயே சொல்லி விட வேண்டும்.
பேசியபடி சம்பளத்தை தர மறுத்தால் ஏற்க மாட்டேன். அது எனக்கு பிடிக்காத விஷயம். அவர்கள் சொன்னதை நான் செய்த பிறகு பேசிய சம்பளத்தை தர வேண்டும். இதை வைத்து சம்பள விஷயத்தில் கெடுபிடியாக இருக்கிறேன் என்று விமர்சித்தால் கவலைப்பட மாட்டேன்.”
இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.