சினிமா

பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதா? - தனுஸ்ரீ தத்தா ஆவேசம்

Published On 2019-06-15 06:51 GMT   |   Update On 2019-06-15 06:51 GMT
நானா படேகருக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கோர்ட் கூறியதற்கு, நடிகை தனுஸ்ரீ தத்தா ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். “2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் நானா படேகருக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தனுஸ்ரீ தத்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இதுகுறித்து தனுஸ்ரீ தத்தா கூறியதாவது:-

“போலீசாரின் செயலை பார்க்கும்போது வெறுப்பாக உள்ளது. நானா படேகர் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்க முயற்சிக்கிறார். எங்களுடையை சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். போலீசாரிடம் வாக்குமூலம் கொடுக்க விடாமலும் தடுக்கிறார்கள். இதனை ஏற்கனவே நான் தெரிவித்து உள்ளேன்.

எனக்கு நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததை பலர் பார்த்தனர். 10 சாட்சிகள் இருந்தார்கள். மிரட்டலுக்கு பயந்து யாரும் வாக்குமூலம் அளிக்க முன்வரவில்லை. நானா படேகரின் நண்பர்களிடம் மட்டுமே போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர்கள் எப்படி உண்மையை சொல்வார்கள்.

எனது தோழியிடமும் வாக்குமூலம் கேட்டுள்ளனர். அவரையும் மிரட்டியதால் எனக்கு ஞாபகம் இல்லை என்று கூறியுள்ளார். கடவுளின் தீர்ப்பை நான் நம்புகிறேன். நானா படேகருக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்.”

இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறினார்.
Tags:    

Similar News