சினிமா
மீடூ புகாருக்கு விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடிய கார்த்திக், முதல் முறையாக மீடூ புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார். #MeToo #SingerKarthik
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடி உள்ள பிரபல பாடகர் கார்த்திக் மீது ‘மீ டூ’வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி இந்த புகாரை கூறியிருந்தார். இதனை பாடகி சின்மயி வெளியிட்டார். இதற்கு தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-
“புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிர் துறந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்மீது கூறப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னை சுற்றி எப்போதும் மகிழ்ச்சி பரவ வேண்டும் என்று விரும்புபவன் நான்.
சமீபகாலமாக என் மீது வதந்திகள் வருகின்றன. நான் இதுவரை யாரையும் புண்படுத்தியது இல்லை. யாருக்கும் தொல்லையோ, அசவுகரியமோ கொடுத்ததும் இல்லை. கடந்த காலங்களில் எனது செயலால் யாராவது சங்கடப்பட்டு இருந்தால் அந்த தவறுக்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
‘மீ டூ’ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புகாரில் உண்மை இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கவும் சட்ட நடவடிக்கைக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன்.”
இவ்வாறு பாடகர் கார்த்திக் கூறியுள்ளார்.