சினிமா

கட்டாயப்படுத்தி ஆபாசமாக நடிக்க வைத்தனர் - சஞ்சனா கல்ராணி

Published On 2018-10-22 10:37 GMT   |   Update On 2018-10-22 10:37 GMT
கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் சஞ்சனா கல்ராணி, இயக்குனர் ஒருவர் கட்டாயப்படுத்தி ஆபாசமாக நடிக்க வைத்தார் என்று கூறியிருக்கிறார். #MeToo
 கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் சஞ்சனா கல்ராணி. தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி. இவர் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே நடிக்க வந்துவிட்டார்.

சஞ்சனா தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

‘நான் 15 வயதில் நடிக்க வந்தேன். பல கனவுகளுடன் சினிமா துறைக்கு வந்தேன். எனக்கு நடிப்பு மீது அளவு கடந்த ஆர்வம். அதனால் படங்களில் நடித்துவிட்டு மீண்டும் படிக்க செல்ல வேண்டும் என்று நினைத்தேன். நான் நடிக்க வந்த போது எனக்கு 16 வயதுதான்.

என் முதல் படமான கண்டாஹெண்டதி படத்தின் இயக்குனர் மர்டர் என்ற இந்தி படத்தை எனக்கு போட்டுக் காண்பித்தார். படத்தில் ஆபாச காட்சிகள் அதிகமாக இருந்தன. இந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.

நான் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். ஆபாச காட்சிகள் அதிகமாக உள்ளன என்று கூறியதற்கு கன்னட ரசிகர்களுக்கு ஏற்ப படத்தில் மாற்றம் செய்யப்படும் என்று இயக்குனர் தெரிவித்தார். ஒரே ஒரு முத்தக் காட்சியில் மட்டும் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்புக்காக பாங்காக்கிற்கு சென்றபோது என் அம்மாவையும் துணைக்கு அழைத்து வருவேன் என்று நான் கூறியதற்கு அவர்கள் சம்மதித்தார்கள்.



ஆனால் பாங்காக் சென்ற பிறகு என் அம்மாவை படப்பிடிப்பு தளத்திற்கு வர அனுமதிக்கவில்லை. அங்கு நிறைய பேர் இருப்பார்கள், அம்மா வர வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு அவர்கள் பல முத்தக் காட்சிகளை படத்தில் சேர்த்தார்கள். 50 முறை முத்தக்காட்சிகளில் நடிக்க வைத்தார்கள். மேலும் என் மார்பு பகுதி, கால்களை ஆபாசமான வகையில் படம் எடுத்தார்கள். கேமராவை அந்த பகுதிகளிலேயே காட்டினார்கள்.

இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு அவரோ, நாங்கள் சொல்லும்படி எல்லாம் செய்யவில்லை என்றால் உன் கேரியரை நாசமாக்கிவிடுவோம் என்று என்னை மிரட்டினார்.

கனவுகளுடன் வந்த சின்னப் பெண்ணை அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பயன் படுத்திவிட்டார்கள். அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து நான் வெளிவர 2 மாதங்கள் ஆனது. நான் தற்கொலை செய்துகொள்வேனோ என்று பயந்து 2 மாதங்கள் என் தாய் என்னுடன் தான் படுப்பார்.

இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
Tags:    

Similar News