சினிமா
மக்களிடத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டு சென்ற பெரிய படைப்பாளி கலைஞர்: வெற்றிமாறன்
கலைஞரின் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துக் கொண்ட வெற்றிமாறன், மக்களிடத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டு சென்ற பெரிய படைப்பாளி கலைஞர் என்று கூறியுள்ளார். #Vetrimaran
தமிழ் சினிமா கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இதில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது:-
கலைஞரின் கடின உழைப்பு எப்போதுமே நாங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் விஷயம். கலைஞரின் தொடக்க காலத்தில் சில படங்களில் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த சூழலில் ஏற்கனவே 20 நிமிடம் எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு வசனம் எழுத சொன்னார்கள்.
எம்.ஜி.ஆர் நடித்த மருத நாட்டு இளவரசி படம் தான் அது. இந்தியாவின் முதல் சாகச வீரன் பற்றிய படம். அங்கு இருந்து தான் எம்ஜிஆர் தனது சினிமா வாழ்க்கையை தொடங்குகிறார். கலைஞருக்கு முன்பு சினிமா நேரடியாக மக்களிடம் பேச முடியாத சூழலில் இருந்தது.
அந்த சூழலில் சினிமாவின் மூலம் மக்களிடத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டு சென்ற பெரிய படைப்பாளி அவர். சினிமாவை ஆயுதமாக பயன்படுத்தி மக்களை ஒடுக்கு முறையில் இருந்து மீட்டெடுத்தது கலைஞர். சினிமாவில் தற்போது மீண்டும் ஒடுக்கப்பட்டவர்கள் குரல் கேட்க தொடங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.